
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.
இந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.
இப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த "கரவையூற்று" என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் "மன ஓசை" நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.
ஒலிப்பெட்டகம்
பாகம் 1
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து " தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.
15 comments:
என்ன தல,
இவ்வளவு பெரிய பதிவா போட்டுவிட்டீர்கள். 2-3 பாகமாகப் போடக்கூடாதா? கொஞ்சம் தான் படிக்க முடிந்தது. பிறகு படிக்கிறேன்.
(சிவதம்பி ஐயா அவர்களின் தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரையை கீற்று.காம்-ல் படித்துள்ளேன். கிடைத்தால் படிக்கவும்.)
அருமையான நீண்ட ஆக்கத்திற்கு நன்றி அண்ணா !
// தமிழ் நாதம் ஊடாக Real Player இல் கேட்க//
சரிவருகுதில்லை :((
ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்யக்கூடியவாறு ஏதாவது ஆவன செய்வீர்களா ?[நான் இணையம் பயன்படுத்தும் இடத்தில் Headset இல்லை அதனால் ஒலிவடிவில் வரும் ஆக்கங்களை தரவிறக்கி வீடுசென்றே கேட்பதுண்டு]
வாங்க அருண்
ஒலிப்பதிவை மட்டும் போடுவது தான் முதல் நோக்கமாக இருந்தது. பதிவைப் பிரித்தால் திசை மாறி விடும் என்பதால் ஆவணப்படுத்தலாக ஒன்றாக இட்டிருக்கின்றேன். முழுதும் கேட்டு/படித்து விட்டு சொல்லுங்கள்.
தொல்காப்பிய ஆராய்ச்சியைத் தேடிப் படிக்கின்றேன். நன்றி
//மாயா said...
ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்யக்கூடியவாறு ஏதாவது ஆவன செய்வீர்களா ?//
வணக்கம் மாயா
கீழ் வரும் முகவரிகளை புது பிரவுசரில் அடியுங்கள் MP3 ஆக இந்த மூன்று கோப்புக்களையும் தரவிறக்கம் செய்யலாம்
http://www.radio.kanapraba.com/Sivathambi1.mp3
http://www.radio.kanapraba.com/Sivathambi2.mp3
http://www.radio.kanapraba.com/Sivathambi3.mp3
கானாப் பிரபா,
ஏற்கனவே இந்த ஒலிப்பதிவின் இரண்டாம் பாகம் வரை தமிழ்நாதத்தில் கேட்டிருந்தேன். உண்மையிலேயே ஒரு பாராட்ட பட வேண்டிய விடயத்தையே செய்து இருக்கின்றீர்கள். மூன்றாம் பாகம் வரை கேட்டு முடித்து விட்டு அது பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என நினைத்தேன். அதற்குள் பதிவாக போட்டு விட்டீர்கள். அதை விட அதை வரி வடிவத்திலும் இட்டு இருக்கின்றீர்கள். மிகுந்த சிரமம் மிகுந்த வேலை. இந்த வரி வடிவத்திற்காகவே உங்களை இன்னும் ஒரு முறை பாராட்டலாம்.
அத்தோடு இதை இரண்டு பதிவாக போட்டு இருந்தாலும் அதிக பேரை வாசிக்க வைத்திருக்கும். ஒலிப்பதிவிலும் கூட கொஞ்சம் வேகப்படுத்தி இருக்கலாம் (எடிட்டிங்கில்) என தோன்றியது. அதற்கு இடையே ஆன இசைத்துண்டுகளை குறைத்து பேட்டியில் குரலின் வேகத்தை சற்று அதிகரித்து இருக்கலாம்.
வணக்கம் கோசலன்
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி
ஒலிப்பதிவை வேகப்படுத்தும் மென்பொருள் இருந்தாலும் அதைச் செய்யாமைக்கு காரணம், இதன் இயல்புத் தன்மை கெட்டு பேசுபவரின் கருத்தும், நான் கொடுக்கும் அறிமுகமும் சிதைந்து விடும் என்ற காரணமே ஆகும். இடையிசை சேர்க்கக் காரணம் ஒலிப்பகிர்வை வேறுபடுத்தவும், கேட்பவர்க்கு சிறு ஓய்வைக் கொடுக்கவுமே ஆகும்.
உண்மையைச் சொல்லப் போனால் ஐந்து நாள் தூக்கம் கெட்டுத் தான் தட்டச்சு முடிக்கமுடிந்தது. ஆனால் சிவத்தம்பி அவர்களின் பெரும் பணிக்கு இது தூசு.
இவ்வெழுத்துப் பதிவுகளைத் தனியே பிரித்தும் தனிப்பக்கங்களில் வாசிக்கும் வசதியை நாளை தருகின்றேன்.
வணக்கம் பிரபா....சிறு வயது முதல் தனிப்பட்ட ரீதியில் ஓரளவு அறிந்திருந்தேன் ஆயினும் ...இந்த பதிவின் மூலம் தான் இது வரை எனக்கு தெரிந்திராத அவரைப் பற்றி பல தகவல்களை அறிந்துகொண்டேன் .
பதிவுக்கு மிக்க நன்றிகள்
வணக்கம் சின்னக்குட்டியர்
நீங்கள் கரவெட்டி போல.
வருகைக்கு மிக்க நன்றிகள்
பெறுமதியான கட்டுரை. பெட்டக நிகழ்ச்சியிலும் கேட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தாசன்
ஒரு பேராசான் பற்றிய பதிவினை காலத்தின் தேவை அறிந்து செய்து இருக்கின்றீர்கள். நன்றி.
பிரபா!
இவர் பெயரைக் கேள்விப்பட்டுள்ளேன். கட்டுரைகள் பத்திரிகையில் படித்துள்ளேன். ஆனால் இவ்வளவு விண்ணன் என்பது உண்மையில் உங்கள் பதிவு மூலமே
அறிந்தேன்.
மிகச் சிரமமெடுத்து சிறப்பாக தயாரித்துள்ளீர்கள்.
குரல்பதிவால் சம்பத்தப்பட்டவர்களின்
குரலைக்கூட கேட்ட வைத்ததற்கு
பாராட்டுக்கள்
அவர் இன்னும் வாழ்ந்து தமிழுக்கு மேலும் செய்யட்டும்.
பாரதிநேசன் said...
ஒரு பேராசான் பற்றிய பதிவினை காலத்தின் தேவை அறிந்து செய்து இருக்கின்றீர்கள். நன்றி.
வணக்கம் பாரதிநேசன்
பதிவை வாசித்து/கேட்டுத் தங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
வணக்கம் யோகன் அண்ணா
சிவத்தம்பி போன்றோர் குறித்து ஆவணப்படுத்தும் போது நானும் கற்க முடிகின்றது.
செயற்கரிய செய்தோர் பெரியோர் என்பது போல் இவர் போன்ற பல அறிஞர்கள் நம் தமிழ்ச்சமூகத்துக்கு விட்டுச் செல்லும் சொத்துக்கள் பெறுமதியானவை.
தமிழ்ப் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு இரம் கரம் கூப்பி, என் சார்பிலும், தோழன் இராகவன் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலி!
பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகம் மட்டுமே பேசப்படும்! ஈழத்தின் தமிழ்த் தொண்டு அதிகம் இடம்பெறாது!
இந்தக் குறையை நீக்கி, பேரா.சிவத்தம்பி எழுதிய தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமும் சேர்த்து, ஒரு ஒட்டுமொத்த பார்வை கிடைக்கும்!
வரலாற்றோடு ஒட்டிய இலக்கிய வாசிப்பை, பெரிதும் பிரபலம் ஆக்கியவர் பேராசிரியர்! முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்மம் ஆய்விலே ஐயா சிவத்தம்பியும் முக்கியமானவர்!
அருமையான தரவுகளை முன் வைத்து, ஏதோ மேம்போக்காக நம்பிய கருத்துகளை எல்லாம் தயவு தாட்சணியம் இன்றி, பின்னுக்குத் தள்ளிய சான்றாண்மைக் குணம் ஐயாவிடத்திலே உண்டு!
கட்டுரைகள் மட்டுமல்லாது, அன்னாரின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!
Post a Comment