Thursday, February 15, 2007

"அண்ணை றைற்"

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு பகுதியூடாகச் செல்லும் பஸ்களும் அவற்றின் இலக்கத்தைத் தாங்கி நிறைவுத் தரிப்பிடப் பெயர் கொண்டு நிற்க, அவற்றின் பக்கத்தில் நிற்கும் அந்தந்த பஸ் கண்டக்ரர்கள் ஆட்களைக் கூவிக் கூவி அழைக்கின்றார்கள். ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி சுற்றுப் போய் மீண்டும் வரலாம் என்ற அல்ப ஆசை என் அடிமனத்தில் அப்போது தோன்றினாலும் அடக்கிக்கொண்டு, கையிலிருந்த போன புகைப்படக்கருவி மூலம் அக்காட்சியை ஒளிப்படமாக அடக்குகின்றேன்.
எம்மூரில் ஒவ்வொரு தொழிலையும் தம் தம் எல்லைகளுக்கு உட்பட்டு அவற்றை அனுபவித்துச் செய்பவர்களை காய்கறிக்கடைக்காரர், கமக்காரரிலிருந்து பஸ் ஓட்டுனர்கள் வரை நாம் தரிசித்திருக்கிறோம். நான் புலம் பெயரமுன்னர் கிளாலிப் பயணம் ஊடாக வவுனியா வரும் பயணத்தில் மினிபஸ் பயணமும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. வாகன ஓட்டுனர் தன் பங்கிற்குப் பாடல் தெரிவில் ஈடுபட (பெரும்பாலும் நெய்தல், உதயம் போன்ற எழுச்சிப் பாடல்கள் அப்போது) , துணையாகப் பணச்சேகரிப்பில் ஒருவரும், இன்னொரு இளைஞர் (கைத்தடி!) பயணிகளின் பொதிகளை இறக்கும் உதவியாளனாகவும் இருப்பார்கள். பயணிக்கும் வயசாளிகளைச் சீண்டிப்பார்ப்ப்பது. ஏதோ நகைச்சுவை ஒன்றை விவேக் ரேஞ்சிற்குச் சொல்லிவிட்டு இளம் பெண்களை ஓரக்கண்ணால் எறிந்து, அவர்கள் தனது நகைச்சுவைக்கு எந்தவிதமான முக பாவத்தைக் காட்டினார்கள் என்று உறுதிப்படுத்துவது, வாகனச்சாரதி தவிர்ந்த மற்ற இரண்டு பேரின் உப வேலை. அதைப் பற்றி சொல்ல இன்னொரு பதிவு வேண்டும்.


தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன். நானறிந்த வரை " அண்ணை றைற்' என்ற இந்தத் தனி நடிப்பு எழுத்துப் பிரதியாக முன்னர் வரவில்லை. எழுத்துப் பிரதியாக நான் இதை அளிக்கக் காரணம், இந்தப் படைப்பின் பிரதேச வழக்கை மற்றைய ஈழத்துப் பிரதேச வாசிகள், மற்றும் தமிழக நண்பர்கள் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அமைந்திருக்கும் இப்படைப்பு மூலம் சில பிரதேச வழக்குச் சொற்களையும் நீங்கள் கண்டுணர ஒரு வாய்ப்பு. தமிழக நண்பர்களுக்கு மட்டும் ஒரு செய்தி, இந்த கே.எஸ்.பாலச்சந்திரனின் படைப்பான "வாத்தியார் வீட்டில்" நாடக ஒலிச்சித்திரம் தான் நடிகர் கமலஹாசனுக்கு தெனாலி படக் குரல் ஒத்திகைக்குப் பயன்பட்டது.

நான் எதேச்சையாக இலங்கை வானொலியின் பண்பட்ட கலைஞர் லண்டன் கந்தையா புகழ் சானா என்ற சண்முக நாதனின் நினைவு மலர் மற்றும் பரியாரி பரமர் உரைச்சித்திரம் தாங்கிய நூலைப் புரட்டியபோது, கே.எஸ்.பாலச்சந்திரன் அந்நூலில் வழங்கிய நினைவுக்குறிப்பில் இப்படிச் சொல்கின்றார்.
"தனிப்பாத்திரங்களை நகைச்சுவையாக அறிமுகம் செய்யும் வகையிலே, "பரியாரி பரமர்" போன்ற நடைச்சித்திரங்களை சானா' அவர்கள் எழுதியிருக்கின்றார். மிகவும் சுவையான இந்தக் காலப்பதிவுகள் நூல் வடிவில் கொண்டுவரப்படல் வேண்டும்"
இதைத் தான் "அண்ணை றைற்" மூலம் ஒரு அணிலாக என் பங்களிப்பைச் செய்திருக்கின்றேன் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு.

" அண்ணை றைற்" தனி நடிப்பு, எழுபதுகளில் ஆரம்பித்து எண்பதுகளின் நடுப்பகுதி வரை பாடசாலைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் ஒரு சிறப்பானதொரு படையலாகக் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் பெருவாரியான ரசிகர் வட்டத்தை அவருக்கு வளர்த்துவிட்டது. சென்ற பதிவில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி நான் எழுதியதை வாசித்துப் பின்னூட்டம் மட்டுமல்ல தனிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மூலமும் பல நண்பர்கள் அதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நண்பர் சின்னப் பிள்ளையாக மாறி ரொம்பவே அதைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொருவர் அடிக்கடி கோயில் திருவிழாக்களின் தணணீர்ப்பந்தல்களில் ஒலிபெருக்கியில் பாடல்கள் தவழவேண்டிய வேளைகளில் "அண்ணை றைற்" ஐத் திரும்பத்திரும்பப் போட்டதை நினைவுபடுத்தினார். "அண்ணை றைற்" கேட்டுக்கொண்டே தண்ணீர்ப் பந்தலில் சக்கரைத் தண்ணீரை மெது மெதுவாகக் குடித்ததை மறக்கமுடியுமா?

ஒரு பஸ் கொண்டக்ரர் தான் சந்திக்கும் மனிதர்களின் (தன்னையும் கூட) குணாதிசயங்களை நகைச்சுவையாகச் சொல்வதினூடே நம் தாயகத்து வெள்ளாந்தி மனிதரிகளின் சுபாவங்கள் எங்கோ கேட்ட, பார்த்த விஷயமாக இருக்கிறேதே என்று யோசித்தால், அது நமக்கும் நேர்ந்த அனுபவம் என்று தானாகவே உணரலாம். அதாவது நமது அன்றாட அசட்டுத் தனமான அல்லது வேடிக்கையான செயல்களை மற்றவர்கள் இன்னொருவரைக் குறிப்பொருளாகக் காட்டிச் சொல்லும் போது நமக்கு அது நகைச்சுவையாக இருக்கின்றது.

ஒரு பஸ்ஸில் வந்து போகும் பாத்திரங்கள் ஒன்றையும் தவறவிடாது அனைவரையும் இவர் விட்டுவைக்கவில்லை. கிழவியாகட்டும் , இளம் பெண்ணோ , இளம் பையனோவாகட்டும் அவர்களில் குரலாகவும் மாற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் நடித்திருப்பது இந்தத் தனி நடிப்பின் மகுடம். சரி இனி உங்களிடமேயே விட்டுவிடுகின்றேன். ஒலியைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

உங்கள் அபிமானத்துக்குரிய கலைஞர், தனிநடிப்புப் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் வழங்கும் "அண்ணை றைற்"

ஒலி வடிவில் கேட்க

நெல்லியடி, அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர்,
நீர்வேலி கோப்பாய், யாழ்ப்பாணம் எல்லாம் ஏறு
அண்ணை கொஞ்சம் பின்னாலை எடுத்து விடுங்கோண்ணை.

அண்ணை றைற் அண்ணை றைற்

அவசரப்படாதேங்கோ எல்லாரையும் ஏத்திக்கொண்டுதான் போவன்
ஒருத்தரையும் விட்டுட்டுப் போக மாட்டன்.

தம்பீ ஏன் அந்தப் பொம்பிளைப்பிள்ளையளுக்கை நுளையிறீர்
கொஞ்சம் இஞ்சாலை வாருமன்.
நீர் என்ன அக்கா தங்கச்சியோட கூடப் பிறக்கேல்லையே?
நீர் என்னும் சரியான ஹொட்டல்லை சாப்பிடேல்லை போல கிடக்கு
கொஞ்சம் இஞ்சாலை அரக்கி நில்லும்.

ஆச்சீ!! பொடியனுக்கு எத்தினை வயசு?
இருவத்தஞ்சு வயசிருக்கும், புட்போல் விளையார்ற வயசில
இடுப்பிலை வச்சுக்கொண்டு நாரி முறிய முறிய நிக்கிறாய்
டிக்கற் எடுக்கவேணும் எண்ட பயமோ
இறக்கிவிடணை பெடியனை
(ஆச்சி தனக்குள்) அறுவான்
என்ன சொன்னீ? அறுவானோ? பார்த்தியே? முன்னாலை போணை.

தம்பீ அதிலை என்ன எழுதியிருக்கு தெரியுமே?
புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது, ஆஆ
ஆரோ காதல் விலக்கப்பட்டுள்ளது எண்டு மாத்திப்போட்டு போட்டான்
முந்தியிருந்தது புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது.
நீரென்ன சிமெந்து பக்ட்றி புகை போக்கி மாதிரி
புக்கு புக்கெண்டு விட்டுக்கொண்டிருக்கிறீர்?
யன்னலுக்குள்ளால இறியும் கொள்ளிக்கட்டையை
இல்லையெண்டால் நான் உம்மை எறிஞ்சுபோட்டு போடுவன் யன்னலுக்குள்ளாலை.

இந்தக்காலத்துப் பெடியள் பாருங்கோ வலு பொல்லாதவங்கள்
கண்டபடி கொழுவக்கூடாது
அண்டைக்கு இப்பிடித்தான் பாருங்கோ ஒருதனோடை கொழுவிப் போட்டு நான் வந்து ஸ்ரைலா
வந்து புட்போர்ட்டிலை நிண்டனான்.
அவன் இறங்கிப் போகேக்கை எட்டிக் குட்டிப் போட்டு ஓடீட்டான்
அண்டையில இருந்து பாருங்கோ கொழுவிற நாட்கள்ள
புட்போட்டிலை நிக்கிறதில்லை, புட்போட்டிலை நிக்கவேணுமெண்டால் நான் கொழுவிறதில்லை
வலு அவதானம்.

அண்ணை எடுங்கோண்ணை, அண்ணை றைற்.....

ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கக்கூடாது,
எல்லாரும் உள்ளுக்கை ஏறுங்கோ அல்லாட்டா இறங்கோணும்
ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கவிடமாட்டன் இண்டைக்கு
முந்திப் பாருங்கோ இப்பிடிப் புட்போட்டில கனபேர் நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் இப்ப செய்யிறதில்லை
முந்திக் கனபேர் புட்போட்டிலை நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் என்னண்டாப் பாருங்கோ
எல்லாரும் உள்ளுக்கை ஏறவேணும் இல்லாட்டா இறங்கவேணும்
இல்லாட்டா பஸ் போகாது எண்டு சொல்லிப் போட்டு
நான் கீழ... நிலத்தில இறங்கி நிக்கிறனான்
இப்ப அப்பிடிச் செய்றேல்லை
அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ கனபேர் புட்போட்டிலை நிண்டாங்கள்,
நான் சொல்லி அலுத்துப் போய் கீழ இற்ங்கி நிலத்தில நிண்டண்
உள்ளுக்கை நிண்ட படுபாவி ஆரோ மணி அடிச்சு விட்டுட்டான்
மணியண்ணருக்குத் தெரியாது நான் கீழை இறங்கி நிண்ட விஷயம்
ரண்டரைக் கட்டை தூரம் துரத்து துரத்தெண்டு துரத்திப் போய்
ஒண்டரைக் கட்டை தூரம் ரக்சியில போயெல்லே பஸ்ஸைப் பிடிச்சனான்.
அண்டையில இருந்து உந்த விளையாட்டு விர்றேல்லை.

அப்பூ! அந்தக் கொட்டனை விட்டுட்டுப் போணை,
அது பத்திரமா நிற்கும், விழாது.
ஏதோ தூண் பிடிச்ச மாதிரி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறீர்.
தம்பீ! முன்னாலை இருக்கிற அய்யாவோட கோபமே? ஒட்டப் பயப்பிர்றீர்.
தள்ளி முன்னுக்கு கிட்டக் கிட்ட நில்லுங்கோ.

நான் சொன்னால் நம்ப மாட்டியள் முன்னால இரண்டு பேர் நிக்கினம்
என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ
வீட்டில சொல்லிப் போட்டுவாறது பள்ளிக்கூடத்துக்குப் போறன்
படிக்கப் போறன் டியூசனுக்குப் போறன் எண்டு, என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ
பெண்குரல் : "இஞ்சருங்கோ அண்டைக்கு வாறன் எண்டு சொல்லிப் போட்டுப் பிறகேன் வரேல்லை"
ஆண்: நான் எப்பிடி வாறது? நான் வரேக்கை உங்கட கொப்பர் கொட்டனோட நிக்கிறார்.
நான் பயத்திலை விட்டுட்டு ஓடியந்துட்டன்
பெண்குரல்: என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னிலை விருப்பமில்லை என்ன?

தம்பீ கொஞ்சம் முன்னாலை அரக்கி நில்லும்,
தங்கச்சி கொஞ்சம் இஞ்சாலை அரக்கி வாணை.
அண்ணை கொஞ்சம் இறுக்கிப் பிடியண்ணை,
இது வலு ஆபத்தா வரும் போல கிடக்கு.

உதார் மணியடிச்சது?
அப்பூ ! உதென்ன குடை கொழுவுற கம்பியெண்டு இனைச்சீரே?
மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப்போட்டு தொங்கிப்பிடிச்சுக்கொண்டு நிக்கிறார்
கழட்டும் காணும் குடையை
என்னது மான் மார்க் குடையோ?ஓம் மான் மார்க் குடை
எ எ என்ன என்ன என்ன? ஒழுகாதோ?
இப்ப மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப் போட்டு
மான் மார்க் குடை ஒழுகாது எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறீர்
கழட்டும் காணும் குடையை.

அண்ணை எடுங்கோண்ணை......அண்ணை றைற்

தம்பீ! தாறன் பொறுமன் அந்தரிக்கிறீர்
பொறுமன் ஒரு அஞ்சியேத்து மிச்சக்காசுக்கு
அண்ணை அண்ணையெண்டிருக்கிறீர்
உங்களுக்குத் தான் சொல்லுறன் ரகசியம்
ஆராவது மிச்சகாசு தாங்களாக் கேட்டாலொழிய, நான் குடுக்க மாட்டன்
அப்பிடியும் மிச்சக்காசு கொடுக்கிறதுக்கு ஒரு வழி இருக்குப் பாருங்கோ என்னட்டை.
அண்ணையண்ணை மிச்சக்காசு.....அண்ணையண்ணை மிச்சக்காசு எண்டு சுறண்டு சுறண்டெண்டு சுறண்டி
என்ர யூனிபோர்ம் கிழிஞ்சு, யூனிபோர்முக்கை இருக்கிற சேர்ட்டுக் கிழிஞ்சு, சேர்ட்டுக்கை இருக்கிற பெனியன் கிழிஞ்சு உடம்பில சுறண்டுமட்டும்
நான் திரும்பியும் பார்க்கமாட்டன்.
அப்பிடியும் மிச்சக்காசு கேட்கிறவங்கள் இருக்கிறாங்கள் பாருங்கோ.
தப்பித் தவறி அப்பிடி மிச்சக்காசு என்னட்டைக் கேட்டினமெண்டால்
பத்துரூவா தந்திட்டு ரண்டு ரூபா போக
எட்டு ரூபா காசு மிச்சம் குடுக்கவேணுமெண்டால் ஒரு வேலை செய்வன்
இருவத்தாஞ்சு அம்பேசம் குத்தியாக் குடுத்திடுவன்
அவர் கை நிறையக் காசை வாங்கிக் கொண்டு
மேலையும் பிடிக்கமாட்டார், கீழையும் பிடிக்க மாட்டார்
கையில கிளிக்குஞ்சு பொத்திப் பிடிச்சது மாதிரிப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு நிற்பார்.
எப்படா இறங்குவம், இறங்கிக் இந்தக் கையை விரிச்சுக்
காசை எண்ணுவம் எண்டு காத்துக் கொண்டு நிற்பார்.
நான் மணியடிப்பன், மணியண்ணன் அடுத்த கோல்டிலை தான்
பஸ்ஸைக் கொண்டுபோய் நிற்பாட்டுவார்.

இறங்கி, நிலத்தில காலை ஊண்டிக் ,கையை விரிச்சு எண்ணிப்பாப்பார்,
ரண்டு மூண்டு ரூபாய் குறைஞ்சிருக்கும். பஸ் பறந்திருக்கும்.
எனி உந்த பஸ்ஸைத் துரத்திக்கொண்டு நான் ரக்சி பிடிச்சுக்கொண்டு
போறதோண்டு என்னைத் திட்டித் திட்டி வீட்டை போயிடுவார்.

இன்னுமொரு புதினம் பாருங்கோ.
பஸ்ஸுக்குள்ள தங்கச்சிமார் கனபேர் இருந்தால்
தம்பிமார் மிச்சம் கேளாயினம்.
இருபத்தைஞ்சு அம்பேசம் மிச்சம் கேளாயினம் வெட்கத்திலை.
தூர இருந்துகொண்டு மெல்லிசாக் கையைக் காட்டிக் கொண்டே கேட்பினம்
" அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்"
" அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்"
நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டன்.

உதார் மணியடிச்சது?
ஆறு பேர் இறங்கிறதுக்கு ஆறு தரம் மணியடிக்கிறீரே?
டாங்க் டாங்க் டாங்க் எண்டு
ஆறு தரம் அடிச்சால் பஸ் நிக்காது காணும்.
நிண்டு நிண்டு போகும்.
கண்டறியாத ஒரு மீசையோட முழுசிறீர்.

அண்ணை எடுங்கோண்ணை......அண்ணை றைற்

தம்பி கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவன்.
எல்லாரும் கொஞ்சம் முன்னுக்குப் போங்கோவன்.
உங்களுக்குச் சொன்னா என்னப் பாருங்கோ
இந்த உலகத்திலை எல்லாரும் முன்னுக்குப் போகவேணுமெண்டு
நினைக்கிற ஒரெயொரு சீவன் நான் தான்.

அண்ணை கோல்ட் ஓன்.

அண்டைக்கு இப்பிடித் தான் ஒருத்தர் இன்ரவியூவுக்குப்
போகவெண்டு என்ர பஸ்ஸில வந்தார்.
படுபாவிக்கு ரை கட்டத் தெரியேல்லை.
ஆராவது தெரிஞ்சாளைக் கேட்டுக் கட்டியிருக்கலாம்.
இவன் தானே ரை கட்டிப் பழகியிருக்கிறான், சுருகு தளமாக் கட்டி.
சுருகுதளமாக் கட்டிக்கொண்டு இவர் வலு ஸ்ரைலா வந்து நிண்டார் பஸ்ஸுக்குள்ள.
பக்கத்திலை ஒரு கட்டைக் கிழவன் நிண்டது.
மணியண்ணன் மாடொன்றைக் கண்டுட்டுச் சடன் பிறேக் போட
பக்கத்திலை நிண்ட கட்டைக் கிழவன் பார்த்திருக்கு
எல்லா பாறிலயும் ஒவ்வொருதனும் தொங்கீனம்
நான் பிடிக்க ஒரு பாறில்லையே எண்டு ஏங்கின கிழவன்
இவற்றை ரைடயைக் கண்டிட்டுது.
பாஞ்செட்டி ரையைப் பிடிக்க சுருகுதளம் இறுகு அவர் இப்பிடி நிக்கிறார் மேலை.
எமலோகத்துக்கு இன்ரவியூவுக்குப் போக ஆயித்தம்.
நான் பக்கத்திலை இருந்த மனிசனிட்ட நல்ல காலம்
சின்ன வில்லுகத்தியொண்டு இருந்த படியால் டக்கெண்டு வேண்டி ரையை அறுத்திருக்காவிட்டால் அவர் மேலை எமலோகத்துக்குப் போய் இன்ரவியூவுக்கு நிண்டிருப்பார்.

அண்டைக்கொரு பெடியன் கைநிறையப் புத்தகத்தோட வந்து பஸ்ஸுக்க நிண்டான்.
நான் கேட்டன், "தம்பி எப்பிடி நீர் நல்ல கெட்டிக்காரனோ" எண்டு".
ஓம் எண்டு சொன்னான்.
நான் உடன கேட்டன், சரித்திரத்தில ஒரு கேள்வி.
தம்பீ? கண்டி மன்னன், கடைசி மன்னன் விக்கிரமராசசிங்கனுக்கு கடைசியில ஏற்பட்ட கதி என்ன?
டக்கெண்டு நான் கேட்டன்.
பொடியனும் உடன டக்கெண்டு மறுமொழி சொல்லிப்போட்டான்.
பொடியன் உடன சொன்னான்.
"அதோ கதி தான் " எண்டு.
பெடியள் வலு விண்ணன்கள்.

மணியண்ணர் ஓடுரார் பாருங்கோ ஓட்டம், என்ன
மணியண்ணனுக்கு சந்தோஷம் வரவேணும் பாருங்கோ
சந்தோஷம் எப்பிடி வரவேணும் எண்டு கேட்கிறியள்?
தலை நிறையப் பூ வச்சு, சாந்துப் பொட்டுக் கம கமக்க
காஞ்சிபுரம் சாறி சர சரக்க மணியண்ணையின்ரை சீற்றுக்குப் பின்னால்
சீற்றில வந்து இருக்க வேணும்.
மணியண்ணன் சாடையாக் கண்ணாடியைத் துடைச்சுப் போட்டு
ஒரு பார்வை பார்த்துப் போட்டு ஓடுவார் பாருங்கோ ஓட்டம்.

அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ
ஒரு சந்தோஷம் வந்து மணியண்ணற்ற சீற்றுக்குப் பின்னால இருந்திது.
மணியண்ணர் கண்ணடியில பார்த்துப் போட்டு ஒட்டினார் பாருங்கோ ஓட்டம்
றோட்டில சனம் சாதியில்லை.
ஞாயிற்றுக்கிழமை இல்லை, நல்ல வேர்க்கிங் டே.
றோட்டில சனம் சாதியில்லை.
சைக்கிள்ள வந்த வேலாயுதச் சட்டம்பியார்
சைக்கிளைக் கானுக்கிள்ள போட்டுட்டு
மதிலாலை ஏறிக்குதிச்சிட்டார். அந்தளவு ஓட்டம்
மாலி சந்தையடியில வரேக்க பாருங்கோ
மாடொண்டு குறுக்கை வந்துது
மணியண்ணர் வெட்டினார் ஒரு வெட்டு
பஸ் எங்கை நிண்டது தெரியுமே?
பக்கத்து பாண் பேக்கரிக்கை நிக்குது.
மணியண்ணரைக் காணேல்லை.
"ஐயோ மணியண்ணை,
இருபது இருபத்தஞ்சு வருசம் என்னோட வேலைசெய்த மணியண்ணை
எங்கையண்ணை போட்டியள்" எண்டு நான்
கத்தி, விசிலடிச்சுக் கூக்காட்டிப் போட்டுப் பார்க்கிறன்.
மணியண்ணன் பேக்கரிக் கூரேல்லை நிண்டு ரற்றா காட்டுறார்.
நான் எங்கை இருந்தனான் எண்டு கேக்கேல்லை?
பெரியாஸ்பத்திரியில வேலை செய்யிற பெரிய சைஸ் நேர்சம்மா
ஒராள் இருந்தவ, அவோன்ர மடியில பத்திரமா பக்குவமா இருந்தன்.

அண்ணை கோல்ட் ஓன்.

யாழ்ப்பாணம் வந்ததும் தெரியேல்லை. நான் கதைச்சுக் கொண்டு நிண்டிட்டன்.
அண்ணை கொஞ்சம் பின்னாலை அடிச்சு விடுங்கோண்ணை
நான் ஒருக்கா ரைம் கீப்பரிட்டை போட்டுவாறன்.

அண்ணை றைற்.....அண்ணை றைற்..... அண்ணை கோல்ட் ஓன்.

Comments on ""அண்ணை றைற்""

 

said ... (February 15, 2007 5:11 PM) : 

;))
நன்றி. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

 

said ... (February 15, 2007 5:14 PM) : 

சுடசுட வந்து கருத்தளித்த நண்பருக்கு நன்றிகள். ;-))

 

said ... (February 15, 2007 5:24 PM) : 

பிரபா
மிகச்சமீபத்தில் 77 இலை ;-) கேட்டதுக்கும் இங்கை இருக்கிறதுக்குமிடையிலே சின்னச் சின்ன வித்தியாசங்கள்.
எவ்வளவு என்ரை ஞாபகம் சரியெண்டு தெரியாது; பிழையெண்டால், வசனத்துக்குச் சொந்தக்காரர் இந்தப்பக்கம் வந்தால் அடிக்கமுதல் ஓடிப்போயிடுறன்.


/முந்தியிருந்தது புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது.
நீரென்ன சிமெந்து பக்ட்றி புகை போகி மாதிரி
புக்கு புக்கெண்டு விட்டுக்கொண்டிருக்கிறீர்?/

"உதாலைதான் உந்த நீர்வேலி வாழைக்குலையள் பழுத்தது" என்றும் வருமென்ற ஞாபகம்


/"தம்பீ கொஞ்சம் முன்னாலை அரக்கி நில்லும்,
தங்கச்சி கொஞ்சம் இஞ்சாலை அரக்கி வாணை."/
இதுக்குப் பிறகு, "அவன் அவளைப் பாக்க, அவள் அவனைப் பாக்க, ஒரு சொறி, ஒரு டோண்ட் மென்சன், பிறகென்ன, காதலாகி, இப்பிடி ஓடின எத்தினை கேசுகளுக்கு மணியண்ணையும் நானும் சாட்சிக்கையெழுத்துபோட்டிருக்கிறம்" என்று வருமென்ற நினைவு


/"இவன் தானே ரை கட்டிப் பழகியிருக்கிறான், சுருகு தளமாக் கட்டி.
சுருகுதளமாக் கட்டிக்கொண்டு" /

"ரை இறுகுதடம் சுருகுதடமாக் கட்டிருக்கிறான்" என்று ஞாபகம்

கியரைத் தூக்கிக் கூடைக்குள்ளை போடெண்டு கிழவி சொன்ன கதையும் இருந்ததாய் நினைக்கிறேன்

 

said ... (February 15, 2007 5:26 PM) : 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே வந்ததே...நண்பனே!

இந்த நாள் அன்று போல் இன்பமாய்
இல்லையே இல்லையே.

 

said ... (February 15, 2007 5:30 PM) : 

//Anonymous said...
பிரபா
மிகச்சமீபத்தில் 77 இலை ;-) கேட்டதுக்கும் இங்கை இருக்கிறதுக்குமிடையிலே சின்னச் சின்ன வித்தியாசங்கள்.//

வணக்கம் நண்பரே

நீங்கள் சொன்ன விடயத்தில் கிழவி கியர் கொண்டுபோன கதை நானும் தண்ணீர்ப்பந்தலடியில் கேட்டிருக்கின்றேன். இங்கே நான் இணைத்து ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து மீள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எனவே அவை பின்னாளில் விடுபட்டிருக்கலாம்.

 

said ... (February 15, 2007 5:33 PM) : 

சூப்பர்.....அருமை...ரிப்பீட்டே !!!!

 

said ... (February 15, 2007 5:36 PM) : 

//கரிகாலன் said...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே வந்ததே...நண்பனே!//


உண்மை தான் நண்பனே :-(
இப்படியான ஒலிப்பதிவுகளாதல் எமக்கு உயிர் கொடுக்கட்டும்.

 

said ... (February 15, 2007 5:42 PM) : 

//Anonymous said...

சூப்பர்.....அருமை...ரிப்பீட்டே !!!! //

ரொம்ப நன்றி தல

 

said ... (February 15, 2007 5:44 PM) : 

ஹே! இதை நான் கேட்டிருக்கிறன் பிரபா. எங்கட வீட்டில மத்தியகிழக்கில ஒரு வருசம் இருந்தனாங்கள். அப்ப, அம்மா இதை ஒலிப்பதிவு செஞ்சண்டு வந்தவ. ஒரு வருசம் திரும்பத்திரும்பக் கேட்டு டேப்பே அளிஞ்சுப்போச்சு!

மலரும் நினைவுகளுக்கு நன்றி! வாவ்! இன்னும் கேட்டு முடிக்கேல்ல. மிக்க நன்றி பிரபா.

anony சொன்ன,

//"உதாலைதான் உந்த நீர்வேலி வாழைக்குலையள் பழுத்தது" என்றும் வருமென்ற ஞாபகம்//

//இதுக்குப் பிறகு, "அவன் அவளைப் பாக்க, அவள் அவனைப் பாக்க, ஒரு சொறி, ஒரு டோண்ட் மென்சன், பிறகென்ன, காதலாகி, இப்பிடி ஓடின எத்தினை கேசுகளுக்கு மணியண்ணையும் நானும் சாட்சிக்கையெழுத்துபோட்டிருக்கிறம்" என்று வருமென்ற நினைவு//

§†! þ¨¾ ¿¡ý §¸ðÊÕ츢Èý À¢ÃÀ¡. ±í¸¼ Å£ðÊÄ Áò¾¢Â¸¢Æì¸¢Ä ´Õ ÅÕºõ þÕó¾É¡í¸û. «ôÀ, «õÁ¡ þ¨¾ ´Ä¢ôÀ¾¢× ¦ºïºñÎ Åó¾Å. ´Õ ÅÕºõ ¾¢ÕõÀò¾¢ÕõÀì §¸ðÎ §¼ô§À «Ç¢ïÍô§À¡îÍ!

ÁÄÕõ ¿¢¨É׸ÙìÌ ¿ýÈ¢! Å¡ù! þýÛõ §¸ðÎ ÓÊ째øÄ. Á¢ì¸ ¿ýÈ¢ À¢ÃÀ¡.

-Á¾¢

-மதி

 

said ... (February 15, 2007 5:46 PM) : 

ஒலிப்பதிவுக்குச் சரியான சனநெருக்கடியா இருக்குப்போல கிடக்கு.
எண்டாலும் கேட்டு முடிச்சிட்டன்.

உதைத் தட்டச்ச நீர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீர் எண்டு எனக்கு விளங்குது.

பதிவுக்கு நன்றி.

 

said ... (February 15, 2007 5:47 PM) : 

வணக்கம் மதி

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க :-)

நீங்கள் பின்னூட்டியதில் ஒரு பகுதி எழுத்துக்கள் விளங்கவில்லை, எனக்கு வயசுபோட்டுதோ? இல்லாவிட்டால் மீளத் தமிழில் அனுப்புங்கள் ;-)

 

said ... (February 15, 2007 6:04 PM) : 

மதியக்கா வீட்டு ரேப்தான் அழிஞ்சு
போச்செண்டால் அவரின் எழுத்துமல்லோ அழிஞ்சு சிதம்பரசக்கரமா தெரிய்து.திருப்பி எழுதுங்கோ.

 

said ... (February 15, 2007 6:33 PM) : 

பிரபா, அருமையான பதிவு. முழுமையும் எழுத்தில் தந்தமைக்கு நன்றிகள். அந்த நாளில் கேட்டது. எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது.
__________________________
மதி திஸ்கியில எழுதினது இதுதான்:
ஹே! இதை நான் கேட்டிருக்கிறன் பிரபா. எங்கட வீட்டில மத்தியகிழக்கில ஒரு வருசம் இருந்தனாங்கள். அப்ப, அம்மா இதை ஒலிப்பதிவு செஞ்சண்டு வந்தவ. ஒரு வருசம் திரும்பத்திரும்பக் கேட்டு டேப்பே அளிஞ்சுப்போச்சு!

மலரும் நினைவுகளுக்கு நன்றி! வாவ்! இன்னும் கேட்டு முடிக்கேல்ல. மிக்க நன்றி பிரபா.
_____________________

நன்றி பிரபா.

 

said ... (February 15, 2007 7:52 PM) : 

//வசந்தன்(Vasanthan) said...
ஒலிப்பதிவுக்குச் சரியான சனநெருக்கடியா இருக்குப்போல கிடக்கு.
எண்டாலும் கேட்டு முடிச்சிட்டன்.

உதைத் தட்டச்ச நீர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீர் எண்டு எனக்கு விளங்குது.//

உண்மைதான் வசந்தன், இன்று நான் வேலைக்குப் போகவில்லை, மதியம் 1.30 இற்கு கணினி முன் இருந்தேன். பதிவை முழுமையாகப் போட்டு முடிக்க 5 மணி ஆயிற்று. 7.49 நிமிஷ ஒலி என்றாலும் கேட்டு அதே வார்த்தைப் பிரயோகத்தை எழுத்தில் தரவேண்டும் என்ற முயற்சிதான் நேரமெடுத்தற்கு காரணம். ஆனால் இந்தக் கலைஞர்களின் பெரும் பணியோடு ஒப்பிடும் போது என் நேரம் சிறு துளி தான்.

பாலச்சந்திரன் அவர்களின் மற்றைய நாடகங்களையும் இதே பாணியில் தான் தரவிருக்கின்றேன்.

 

said ... (February 15, 2007 9:03 PM) : 

பிரபா!
நன்றி; வெகு சிரத்தையெடுத்துள்ளீர்; இரவே கேட்கமுடியும்; பின் கட்டாயம் விபரமாக எழுதுகிறேன்.

 

said ... (February 15, 2007 9:07 PM) : 

எனது அன்ரியாட்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்... ஒலியாய் இன்று கேட்க வழி சமைத்த பிரபாவிற்கு நன்றிகள்.

 

said ... (February 15, 2007 9:08 PM) : 

//கரிகாலன் said...
மதியக்கா வீட்டு ரேப்தான் அழிஞ்சு
போச்செண்டால் அவரின் எழுத்துமல்லோ அழிஞ்சு சிதம்பரசக்கரமா தெரிய்து.திருப்பி எழுதுங்கோ.//

கரிகாலன்
மதியக்கா எண்டு சொன்னதுக்கு இப்பவந்து அவ சிதம்பர சக்கரமா எழுதப் போறா, கவனம் ;-))

 

said ... (February 15, 2007 9:11 PM) : 

//Kanags said...
பிரபா, அருமையான பதிவு. முழுமையும் எழுத்தில் தந்தமைக்கு நன்றிகள். //

மிக்க நன்றிகள் சிறீ அண்ணா, இதுபோன்ற பதிவுகளை அதிகப்படுத்தவுள்ளேன். வழி சமைத்த காலத்துக்கு வணக்கம்.

 

said ... (February 15, 2007 10:16 PM) : 

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
நன்றி; வெகு சிரத்தையெடுத்துள்ளீர்; இரவே கேட்கமுடியும்; பின் கட்டாயம் விபரமாக எழுதுகிறேன்.//


மிக்க நன்றியண்ணா, கேட்டுவிட்டு முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்

 

said ... (February 15, 2007 10:30 PM) : 

பிரபா... .... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...... கேட்டு கொண்டிருக்கு போது .. வயது குறைஞ்ச மாதிரி பீலிங்... இவ்வளவு சிரமமெடுத்து இந்த பதிவை அழகாக வடிவமைத்த பிரபாவுக்கு கோடி நன்றிகள்...

 

said ... (February 15, 2007 10:34 PM) : 

//மயூரேசன் Mayooresan said ... (February 15, 2007 9:07 PM) :
எனது அன்ரியாட்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்... ஒலியாய் இன்று கேட்க வழி சமைத்த பிரபாவிற்கு நன்றிகள்.//

வணக்கம் மயூரேசன்

உங்கள் தலைமுறைக்கு முந்திய தலைமுறையில் இப்படி எத்தனையோ நல்ல கலைஞர்கள் சிறப்புச் சேர்த்தார்கள். இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் நிலையில் நம் தமிழினம்.

 

said ... (February 16, 2007 12:13 AM) : 

அன்பு பிரபா,

அந்தக் கால இன்ப நினைவுகளுக்குள் உலாவந்தோம்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

பிரகலாதன்

 

said ... (February 16, 2007 12:19 AM) : 

மணி அண்ணை றைற்...பிரபா தங்களின் ஆக்கத்திற்கு நன்றி.

 

said ... (February 16, 2007 2:03 AM) : 

கனக சிறீதரன்: ரொம்ப நன்றி!

கரிகாலன்: என்ர பெயர் 'மதி' 'மதி'. மதியக்கா இல்ல. சரியா?

பிரபா: எழுத நினைச்சு திரும்ப வந்து எழுதினதில பிழைச்சுப்போனது இதுதான்.

இந்த நாடகத்தில ஒரு பொம்பிளையின்ர காதில பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய காதுவளையம் போட்டிருந்தமாதிரி வசனம் வருமல்லே?

இன்னுமொரு ஒரு உதவியும் செய்யுங்களன். இதின்ர mp3 தந்தா, இந்த எம்பி3 ப்ளேயர்களிலயும் போட்டுக் கேட்டண்டு இருக்கலாம்.

-மதி

 

said ... (February 16, 2007 4:04 AM) : 

அருமையான பாதிவு நன்றி கனாபிரபா அண்ணா
ஈழவன்85

 

said ... (February 16, 2007 6:22 AM) : 

பதிவுக்கு நன்றி பிரபா,
அந்த நாள் நாபகத்தை கொண்டுவந்ததற்கு.'சக்கடாத்தாரிண்ட' ஓரங்க நாடகம்/பகிடி கேட்டிருக்கியளோ?

 

said ... (February 16, 2007 7:21 AM) : 

//'சக்கடாத்தாரிண்ட' ஓரங்க நாடகம்/பகிடி கேட்டிருக்கியளோ?//


நாடகம் தொடக்கத்திலை கை சூப்பிக்கொண்டு வருவார் அவர் தானே

 

said ... (February 16, 2007 7:24 AM) : 

அருமையான பதிவு.

 

said ... (February 16, 2007 8:37 AM) : 

//சின்னக்குட்டி said...
பிரபா... .... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...... கேட்டு கொண்டிருக்கு போது .. வயது குறைஞ்ச மாதிரி பீலிங்...//


வணக்கம் சின்னக்குட்டியர்

இந்தப்பதிவை ஓரளவாதல் விரைவாகப் போடக் காரணம் உங்களின் கேட்கவேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றவே. உங்களின் பின்னூட்டம் மூலம் இதை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது.

 

said ... (February 16, 2007 8:42 AM) : 

கானா பிரபா said...
//மதி கந்தசாமி (Mathy) said...
கனக சிறீதரன்: ரொம்ப நன்றி!

கரிகாலன்: என்ர பெயர் 'மதி' 'மதி'. மதியக்கா இல்ல. சரியா?//

பார்த்தீங்களே கரிகாலன், நான் முன்னமே சொன்னனான் தானே ;-))

வணக்கம் மதி (என்றென்றும் !)

MP3 ஆக நான் போடாமைக்குக் காரணம் , பாலா அண்ணா இதை மீண்டும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். என் சுய தீர்மானத்தில் இப்படித் தந்திருக்கின்றேன். ஆனால் சின்னக்குட்டியர் மைக்கைப் பிடிச்சாதல் றெக்கோட் பண்ணிப் போடுவார் எண்டும் தெரியும்.

 

said ... (February 16, 2007 8:43 AM) : 

பிரபா!
எட்டு நிமிடங்கள்; அப்பிடியே குலுங்க முடிந்தது.நெடு நாளுக்குப் பின் சிரிக்க முடிந்தது. மறக்க முடியாத அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு
வந்துள்ளீர்கள். இதை இணையத்திலிட அனுமதித்த திரு. பாலச்சந்திரன் அவர்கட்கும் நன்றி!
எனக்கு ஞாபகம் வருபவை! கடகத்துக்க கியர் போடும் பகிடி; அத்துடன் கர்ப்பிணிப் பெண்ணும் ;கிழவியும் கதைக்கும் சம்பாசனை.
மிக அவதானிப்புடன் இவர் நையாண்டிகள் இருப்பது மிகச் சிறப்பு! முகம் சுழிப்பில்லா நகைச்சுவை!
குடும்பத்துடன் ரசிக்கலாம்.
எழுத்திலும் தந்தது. மிக நன்று.
துல்லியமான ஒலிப்பதிவுக்கு இன்னும் ஒரு சபாஷ்!!
இதுவரை தமிழக நண்பர்கள் கேட்டார்களோ தெரியவில்லை.சிலருக்கு மின்னஞ்சலிடுகிறேன்.
செந்தணல் ரவி இன்னும் கேட்கவில்லையா?

 

said ... (February 16, 2007 8:52 AM) : 

//pirabha said...
அன்பு பிரபா,

அந்தக் கால இன்ப நினைவுகளுக்குள் உலாவந்தோம்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

பிரகலாதன்//

வணக்கம் பிரகலாதன்,

நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மிக்க நன்றிகள்

//Anonymous said...
மணி அண்ணை றைற்...பிரபா தங்களின் ஆக்கத்திற்கு நன்றி. //

நன்றி அண்ணை, பஸ்ஸை எடுங்கோ,
வாற கோல்ட் இறக்கம் ;-))

 

said ... (February 16, 2007 8:53 AM) : 

//Anonymous said...
அருமையான பாதிவு நன்றி கனாபிரபா அண்ணா
ஈழவன்85//


வணக்கம் ஈழவன் தங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள்

 

said ... (February 16, 2007 8:57 AM) : 

//அற்புதன் said...
பதிவுக்கு நன்றி பிரபா,
அந்த நாள் நாபகத்தை கொண்டுவந்ததற்கு.'சக்கடாத்தாரிண்ட' ஓரங்க நாடகம்/பகிடி கேட்டிருக்கியளோ? //


வணக்கம் அற்புதன்

பயந்து பயந்து தான் உங்கட மடலைத் திறந்தனான் ஆனால் பாதிப்பில்லை ;-)

சக்கடத்தாரை மறக்கமுடியுமே, பின்னர் எக்ஸ்போ வீடியோவால் வீடியோவாக்கப்பட்டது, சின்னக்குட்டியர் சொன்னது போல் கை சூப்பிக்கொண்டு வருவார்.

இன்னொன்று லூஸ்மாஸ்டர், அதுவும் இருக்கிறது, ஒவ்வொண்டாத் தாறன்.

 

said ... (February 16, 2007 8:58 AM) : 

நு*_*ளையிறீர்

*_*

:-)))))

 

said ... (February 16, 2007 8:58 AM) : 

//இந்தப்பதிவை ஓரளவாதல் விரைவாகப் போடக் காரணம் உங்களின் கேட்கவேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றவே//

நன்றி .பிரபா....

 

said ... (February 16, 2007 9:14 AM) : 

நுழைந்து-நு(ழை)தல்,நுழையும்!நுழைவதற்காய் நுழைந்தான் கான பிரபா!

*_*

 

said ... (February 16, 2007 9:24 AM) : 

வாசிக்கத் தந்ததுக்கு நன்றி பிரபா. வீட்ட போய்த்தான் கேட்கோணும். இன்டைக்குச் சிவராத்திரிக்கு முழிச்சிருக்கச் சரியானது போலக் கிடக்கு.:O)
-'மழை' ஷ்ரேயா

 

said ... (February 16, 2007 9:35 AM) : 

மதி
mp3 வேணுமோ.. சொல்லுங்கோ எங்கடை தளத்தில வெளியிடுறம். மைக் எல்லாம் எங்களிட்ட இல்லை..

 

said ... (February 16, 2007 9:36 AM) : 

இன்டைக்குச் சிவராத்திரிக்கு முழிச்சிருக்கச் சரியானது போலக் கிடக்கு.:O)

ஓ.. இண்டைக்கு சிவராத்திரியோ.. தகவலுக்கு நன்றி

 

said ... (February 16, 2007 10:54 AM) : 

கானா பிரபா said ... (February 16, 2007 10:53 AM) :
//செல்வநாயகி said...
அருமையான பதிவு.//

வருகைக்கு மிக்க நன்றிகள் செல்வநாயகி

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எழுத்திலும் தந்தது. மிக நன்று.
துல்லியமான ஒலிப்பதிவுக்கு இன்னும் ஒரு சபாஷ்!!
இதுவரை தமிழக நண்பர்கள் கேட்டார்களோ தெரியவில்லை.சிலருக்கு மின்னஞ்சலிடுகிறேன்.
செந்தணல் ரவி இன்னும் கேட்கவில்லையா? //

யோகன் அண்ணா

ஆரம்பத்தில் தமிழக நண்பர்கள் இதைக் கேட்டு பெயர் குறிப்பிடாத பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரவிக்கு ஒரு மடல் அனுப்புகின்றேன்.
என் கடன் பணி செய்து கிடப்பதே.

வணக்கம் மக்களே

உங்கள் எல்லாருக்கும் இந்த ஒலிப்பதிவு பிடித்துவிட்டதால் இதே மாதிரியான ஒலிப்பதிவுகளை மாதாந்தம் தருகின்றேன். என்ன ஒரே பிரச்சனை, தட்டச்சுவதும் ஒலிப்பதிவைக் கணினிக்கு மாற்றுவதும் தான். அதுக்காக "அண்ணை றைற்" போடுவதற்காக வேலைக்கு லீவு எடுத்தமாதிரி எடுக்கமாட்டன் எண்டு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன் ;-)
பிரபா அண்ணை ஒவ்வொண்டா தருவன் கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

 

said ... (February 16, 2007 10:58 AM) : 

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

இது எங்கடை கொம்பனியின்ர வசனம். பயன்படுத்த முதல் அனுமதி பெற வேணும். சரி.. இந்த முறை பரவாயில்லை..

Oh.. sorry.. எங்கடை இதில்லை. எங்கடை
கேளுங்க கேளுங்க கேட்டுக் கெட்டே இருங்க

 

said ... (February 16, 2007 11:01 AM) : 

அதுக்காக "அண்ணை றைற்" போடுவதற்காக வேலைக்கு லீவு எடுத்தமாதிரி எடுக்கமாட்டன் எண்டு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன் ;-)

உதுகளை வேலையிடத்தில செய்ய முடியாட்டில் பிறகென்னத்துக்கு அந்த வேலை..

வேலையிடத்தில இருந்து எத்தனை நாளைக்கு பின்னூட்டங்களை மட்டுறுத்திக் கொண்டு இருக்கிறது..? அடுத்த கட்டத்துக்கு போக வேணுமெல்லோ..

 

said ... (February 16, 2007 11:17 AM) : 

கானா பிரபா உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். எங்கட வீட்டிலை லூஸ் மாஸ்ரர் நகைச்சுவை தான் தேய தேய போட்டு கேட்டிருக்கிறம். மணியண்ணை றைற் கேட்டதில்லை.
பதிவுக்கு நன்றி

உங்கடை சேவை எங்களுக்கு தேவை.

 

said ... (February 16, 2007 11:35 AM) : 

அண்ணை கொஞ்சம் பஸ்சை நிப்பாட்டுங்கோ.நான் எப்பவும் கடைசியாத்தான் வாறனான்.
ச்சா,,நல்லாயிருக்கு.
நான் அங்கை இருக்கேக்கை இதைக் கேட்க ஆசைப்பட்டனான் ஆனா கிடைக்கேலை.
பிறகு பல்கலைக் கழகத்தில படிக்கேக்கை ஆச்சியும் கண்டக்டரும் எண்ட தனி நடிப்பு நான் செய்து, எல்லாருக்கும் பிச்சுப் போச்சு. அப்பதான் இந்த மணி அண்ணை றைட் ஐப்பற்றிச் சனம் கதைக்கக் கேள்விப்பட்டனான்
இப்பதான் இதைப் பற்றி இங்க அறியக் கிடைச்சிட்டுது. ரொம்ப நன்றி.

 

said ... (February 16, 2007 11:41 AM) : 

//Anonymous said...
நுழைந்து-நு(ழை)தல்,நுழையும்!நுழைவதற்காய் நுழைந்தான் கான பிரபா!

*_* //

அடடா, ஆரோ என்னோட பஸ்ஸில வந்த ஆள் எழுதியிருக்கிறார் ;-)

 

said ... (February 16, 2007 11:46 AM) : 

சயந்தன் said...
அதுக்காக "அண்ணை றைற்" போடுவதற்காக வேலைக்கு லீவு எடுத்தமாதிரி எடுக்கமாட்டன் எண்டு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன் ;-)

உதுகளை வேலையிடத்தில செய்ய முடியாட்டில் பிறகென்னத்துக்கு அந்த வேலை..

வேலையிடத்தில இருந்து எத்தனை நாளைக்கு பின்னூட்டங்களை மட்டுறுத்திக் கொண்டு இருக்கிறது..? அடுத்த கட்டத்துக்கு போக வேணுமெல்லோ..
---------------------
Working from Home என்பதைப் பாவிக்கவேண்டியதுதானே!!

 

said ... (February 16, 2007 11:47 AM) : 

கானபிரபா
அண்ணை றைற் முந்தி கேட்டு இருக்கிறன் திருப்ப கேட்க இணைச்சமைக்கு நன்றி!

 

said ... (February 16, 2007 11:49 AM) : 

//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
வாசிக்கத் தந்ததுக்கு நன்றி பிரபா. வீட்ட போய்த்தான் கேட்கோணும். இன்டைக்குச் சிவராத்திரிக்கு முழிச்சிருக்கச் சரியானது போலக் கிடக்கு.:O)
-'மழை' ஷ்ரேயா //


உங்கட புண்ணியத்தில இண்டைக்குத் தான் சிவராத்திரி எண்டு அறிஞ்சன். இண்டைக்குக்கு கோயிலுக்கு போகோணும். வருகைக்கு நன்றி

 

said ... (February 16, 2007 11:51 AM) : 

//கொழுவி said...
மதி
mp3 வேணுமோ.. சொல்லுங்கோ எங்கடை தளத்தில வெளியிடுறம். மைக் எல்லாம் எங்களிட்ட இல்லை.. //


(விவேக் பாணியில்) வந்துட்டாருய்யா நாட்டாமை ;-)

 

said ... (February 16, 2007 12:17 PM) : 

பிரபா,
உதென்ன பகிடி!
சின்னக்குட்டியர், உதைக்கேட்க வயசு குறையுது எண்டு சொல்ல,
உங்களுக்காகத்தான் அவசரமா இதைப் போட்டனான் எண்டு நீர் சொன்னா,
அதுக்கு என்ன விளக்கம்?
ஏதோ சின்னக்குட்டியர் கட்டையில போற வயசில தள்ளாடிக்கொண்டு இருந்ததாகவும் அவரைக்காப்பாற்றத்தான் நீர் இந்தப்பதிவைப் போட்ட மாதிரியுமெல்லோ வருது?

 

said ... (February 16, 2007 12:30 PM) : 

hi priba, as a neighbour of k.s.balachandran i like to share some intersting stories with you
please call me or sms your no
anpudan
suntharalingam iya ( melbourne)

 

said ... (February 16, 2007 12:40 PM) : 

//சயந்தன் said...

உதுகளை வேலையிடத்தில செய்ய முடியாட்டில் பிறகென்னத்துக்கு அந்த வேலை..//


தம்பி சயந்தன்,

ஷ்ரேயாவைச் சீண்டாதையும், பொசுங்கிடுவீர்.
உங்கட கதையைக் கேட்டு கெட்டு குட்டிச்சுவரானது தான் மிச்சம் காணும்

இப்படிக்கு
மொனிற்றர்

 

said ... (February 16, 2007 12:41 PM) : 

//Anonymous said...
வேலையிடத்தில இருந்து எத்தனை நாளைக்கு பின்னூட்டங்களை மட்டுறுத்திக் கொண்டு இருக்கிறது..? அடுத்த கட்டத்துக்கு போக வேணுமெல்லோ..
---------------------
Working from Home என்பதைப் பாவிக்கவேண்டியதுதானே!!//

உங்கள் ஆதரவுக்கு நன்றி ;-)

 

said ... (February 16, 2007 12:59 PM) : 

| அத்துடன் கர்ப்பிணிப் பெண்ணும் |

கொஞ்சம் சத்தம் போடாமக் கேளுங்கோ. கிழவி என்ன மாதிரி கதையைக்குடுக்குதெண்டு
"கிழவி: எடி பிள்ளை எத்தினை மாசமடி?
கர்ப்பணிப்பெண்: ஐயோ கணக்கைத் தவர விட்டிட்டன்"

 

said ... (February 16, 2007 1:20 PM) : 

//இப்படிக்கு
மொனிற்றர்//

மொனிற்றர் நீரோ? கொழுவி வந்து கொழுவப் போறார்.. பாத்து! :O))

-'மழை' ஷ்ரேயா

 

said ... (February 16, 2007 1:50 PM) : 

k.s.balachnthiranin odaly rasiaya enda nakachchuvaiyum irukku

 

said ... (February 16, 2007 1:55 PM) : 

//வி. ஜெ. சந்திரன் said...
கானா பிரபா உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.//

மிக்க நன்றிகள் வி.ஜே

//செல்லி said...
அண்ணை கொஞ்சம் பஸ்சை நிப்பாட்டுங்கோ.நான் எப்பவும் கடைசியாத்தான் வாறனான்.//

தங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்விற்கும் நன்றி செல்லி, செல்லிக்கு ஒரு முழு ரிக்கற் குடுங்கோ ;-)

 

said ... (February 16, 2007 1:58 PM) : 

//Rasikai said...
கானபிரபா
அண்ணை றைற் முந்தி கேட்டு இருக்கிறன் திருப்ப கேட்க இணைச்சமைக்கு நன்றி! //

வருகைக்கு நன்றிகள் ரசிகை

//சொறியன் said...
பிரபா,
உதென்ன பகிடி!
சின்னக்குட்டியர், உதைக்கேட்க வயசு குறையுது எண்டு சொல்ல,
உங்களுக்காகத்தான் அவசரமா இதைப் போட்டனான் எண்டு நீர் சொன்னா,
அதுக்கு என்ன விளக்கம்?//

ஐ அம் வெரி சொறி சொறியன், இனிமேல் இப்படித் தவறு
நடக்காது ;-)

 

said ... (February 16, 2007 1:59 PM) : 

பிரபா!

அண்ணை றைற் நிகழ்ச்சியை மேடைகளில் பாலச்சந்திரன் பல நேர அளவுகளில் செய்வார். ஆனாலும் முந்தைய ஒலிப்பதிவு, 25 நிமிடங்களுக்கு வருமென்று நினைக்கின்றேன். ஆனால் இது எக்கச்சக்கமாக வெட்டுப்பட்டுத்தான் வந்திருக்கு. ஆனாலும் பறவாயில்லை.ஏதோ இதுவெண்டாலும் கிடைச்சுதே.

மேடைநிகழ்ச்சிகளில், தனிநபர் நடிப்பாக தணியாத தாகம் நாடகத்தில வருகிற கடைசிக்காட்சியில தங்கச்சியின்ர செத்தவீட்டில நின்டுகொண்டு அண்ணன் சோமு பேசுகிற வசனமே 8- 10 நிமிடம் வரும்.

பதிவுக்கு நன்றி.

 

said ... (February 16, 2007 2:05 PM) : 

?hi priba, as a neighbour of k.s.balachandran i like to share some intersting stories with you
please call me or sms your no
anpudan
suntharalingam iya ( melbourne)//

எட எங்கட சுந்தரலிங்கம் ஐயாவும் வந்திட்டார்

//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
மொனிற்றர் நீரோ? கொழுவி வந்து கொழுவப் போறார்.. பாத்து! :O))//

சயந்தன் மாஸ்டர் தான் என்னை மொனிற்றறா போட்டவர் பார்க்க: அவரின் வலைப்பதிவு வகுப்பு

 

said ... (February 16, 2007 2:57 PM) : 

பதிவை முன்பே படிச்சுட்டேன்..பின்னூட்டங்களை பார்க்க வந்தேன்...இலங்கை தமிழ் பட்டையை கிளப்புது...மிகவும் ரசித்தேன்...

 

said ... (February 16, 2007 3:15 PM) : 

பிரபா,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரலாமுன்னு பார்த்தா, ஒலி வடிவத்துல கேட்க முடியல. மழையோட சேர்ந்து கேட்கணும், அப்பதான் கொஞ்சம் மொழிபெயர்ப்பு கிடைக்கும்!!!

 

said ... (February 16, 2007 4:25 PM) : 

//Anonymous said...
k.s.balachnthiranin odaly rasiaya enda nakachchuvaiyum irukku//


வணக்கம் நண்பரே

ஓடலி ராசையா தான் அடுத்த ஒலி ஏற்றம்

 

said ... (February 16, 2007 4:53 PM) : 

\\பயந்து பயந்து தான் உங்கட மடலைத் திறந்தனான் ஆனால் பாதிப்பில்லை ;-)\\
HAHA :-)))))

அண்ணை றைற்..... அண்ணை கோல்ட் ஓன் nan munthium kekala ipavum kekela..inimathann kekanum.anal ivalathum porumaya type panina prabannaku oru tea vaangi tharalam.

 

said ... (February 16, 2007 7:12 PM) : 

ஊரின் நினைவுகளை ஒருமுறை மீட்ட... ஊருக்குச் சென்று வந்த ஒரு நினைப்பு...
பதிவினை இணைத்த கானபிரபாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...

 

said ... (February 16, 2007 7:25 PM) : 

எனக்கும் பேருந்தில் பயணித்த அனுபவம் உண்டு.. ஆனால் இப்படி எல்லாம் நடந்ததா நினைவு இல்லை...சின்ன வயதென்றதால் ஜன்னலால எட்டி பார்த்துகொண்டிருந்திருப்பேன் போல..
நல்ல பதிவு அண்ணா..

 

said ... (February 16, 2007 11:39 PM) : 

//மலைநாடான் said...
பிரபா!

அண்ணை றைற் நிகழ்ச்சியை மேடைகளில் பாலச்சந்திரன் பல நேர அளவுகளில் செய்வார். ஆனாலும் முந்தைய ஒலிப்பதிவு, 25 நிமிடங்களுக்கு வருமென்று நினைக்கின்றேன். //

வணக்கம் மலைநாடான்,

கிடைத்தவரை இலாபம் இல்லையா?

//செந்தழல் ரவி said...
பதிவை முன்பே படிச்சுட்டேன்..பின்னூட்டங்களை பார்க்க வந்தேன்...இலங்கை தமிழ் பட்டையை கிளப்புது...மிகவும் ரசித்தேன்... //

வாங்க ரவி

உங்களைப் பற்றித்தான் முன்பு பேசினோம், வருகைக்கு நன்றிகள்

 

said ... (February 16, 2007 11:54 PM) : 

//கஸ்தூரிப்பெண் said...
மழையோட சேர்ந்து கேட்கணும், அப்பதான் கொஞ்சம் மொழிபெயர்ப்பு கிடைக்கும்!!! //

மழையோட சேர்ந்தா கேட்கப்போறீங்க, சுத்தம் ;-) அவங்களுக்கே தமிழ் துள்ளி விளையாடும். ( நான் சொன்ன இந்த விஷயத்தை அவங்களுக்கு சொல்லீடாதீங்க)

 

said ... (February 17, 2007 10:09 AM) : 

//கானா பிரபா சொன்னது:
வழி சமைத்த காலத்துக்கு வணக்கம்.//

பிரபா, அவுஸ்திரேலியத் தமிழருக்குப் பலத்த இழப்பானாலும் அதனை இப்படி ஈடு செய்வது பொறுக்கலாம்:)

 

said ... (February 17, 2007 10:10 AM) : 

//சிநேகிதி said...

நான் முந்தியும் கேக்கல இப்பவும் கேக்கல..இனிமேத்தான் கேக்கனும்.அனால் இவ்வளதும் பொறுமையா ரைப் பண்ணின பிரபாண்ணாக்கு ஒரு ரீ வாங்கி தராலாம். //

தங்கச்சி, உங்கட தமிழ் எழுத்தடிக்கிறதுக்கு என்ன நடந்தது? வெறும் ரீ தானே வாங்கித்தரப்போறியள். பொன்னாடை தரலாமே? சரி பரவாயில்லை, மிக்க நன்றிகள்

 

said ... (February 17, 2007 11:01 AM) : 

வெறும் ரீ தானே வாங்கித்தரப்போறியள். பொன்னாடை தரலாமே? சரி பரவாயில்லை, மிக்க நன்றிகள

ரீ தரும் போது கொஞ்சம் பாலாடை போட்டுத் தரலாம். பரவாயில்லையோ..

 

said ... (February 17, 2007 2:47 PM) : 

கானா பிரபா, ரொம்ப நல்லாருந்தது. போன பதிவுல படிச்சேன், கே. எஸ். பற்றி நீங்க எழுதினது. இதுல அவரோட படைப்பே பாத்து அசந்துட்டேன்!
MP3 பற்றி பின்னூட்டங்கள் பார்த்தேன். கிடைச்சா எங்க அம்மம்மாவுக்கு போட்டுக் காட்டினா அருமையா இருக்கும், இப்ப சென்னையில இருக்காங்க. என் அம்மா இலங்கையில வளர்ந்தவங்க. அவங்க சின்னப் பிள்ளையா இருந்தப்ப உள்ள கதை நிறைய கேட்டாலும் இன்னும் இலங்கை போய் பார்க்கவே இல்லை நான். இலங்கை போகணும் ன்ற ஆசைய இந்தப் பதிவு மேலும் தூண்டுது. நன்றி!

 

said ... (February 17, 2007 5:42 PM) : 

//shanmuhi said...
ஊரின் நினைவுகளை ஒருமுறை மீட்ட... ஊருக்குச் சென்று வந்த ஒரு நினைப்பு...//

வணக்கம் ஷண்முகி

உங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்துகின்றது. மிக்க நன்றிகள்

//தூயா said...
எனக்கும் பேருந்தில் பயணித்த அனுபவம் உண்டு.. ஆனால் இப்படி எல்லாம் நடந்ததா நினைவு இல்லை//

வணக்கம் தூயா

உங்களைப்போன்ற அடுத்த தலைமுறையிடம் எம் கலைஞர் படைப்புச் சென்றது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

said ... (February 17, 2007 11:14 PM) : 

//Kanags said...
பிரபா, அவுஸ்திரேலியத் தமிழருக்குப் பலத்த இழப்பானாலும் அதனை இப்படி ஈடு செய்வது பொறுக்கலாம்:)//

மிக்க நன்றி அண்ணா :-)

//சயந்தன் said...
ரீ தரும் போது கொஞ்சம் பாலாடை போட்டுத் தரலாம். //

சயந்தன் குறும்பு ;-)

 

said ... (February 17, 2007 11:43 PM) : 

//Madura said...
கானா பிரபா, ரொம்ப நல்லாருந்தது. போன பதிவுல படிச்சேன், கே. எஸ். பற்றி நீங்க எழுதினது.//

வணக்கம் மதுரா

வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றிகள். உங்களுக்கு இப்பதிவு ஏற்படுத்திய தாக்கம் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நிம்மதியாக ஈழம் செல்லும் காலம் வரும் என்று பிரார்த்திப்போம். உங்களுடைய அம்மம்மா கேட்கும் வகையில் தனிமடல் ஒன்றை kanapraba@gmail.com இற்குப் போடுங்கள் ஒலிப்பதிவை ஒரு வழியில் தர முயற்சிக்கின்றேன்.

 

said ... (February 17, 2007 11:51 PM) : 

ஒரு வழியில் தர முயற்சிக்கின்றேன்

இரண்டு மூன்று வழிகளில் தந்தால் நாடும் பெறுவோமில்லையா..?

 

said ... (February 17, 2007 11:59 PM) : 

//Anonymous said...
ஒரு வழியில் தர முயற்சிக்கின்றேன்

இரண்டு மூன்று வழிகளில் தந்தால் நாடும் பெறுவோமில்லையா..? //

குறும்பு ;-)))

 

said ... (February 19, 2007 12:49 PM) : 

Hi, Piraba Anna

I recently came across your article "அண்ணை றைற்". I really enjoyed the article. I instantly felt I was in Jaffna.

Thank you for a great article.

 

said ... (February 19, 2007 2:06 PM) : 

வருகைக்கு நன்றிகள் சகோதரனே, உங்கள் கருத்தால் மகிழ்வடைகின்றேன்

 

said ... (February 20, 2007 12:02 PM) : 

முதலில் யோகன் ஐயாவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவைத் தமிழ்மணத்தில் பார்த்திருந்தும் படிக்காமல் விட்டிருந்தேன். அவர் தான் தனிமடலில் இப்பதிவைப் படிக்கும் படி சொன்னார். சொன்ன பேச்சைக் கேட்டதால் ஒரு நல்ல பதிவைப் படிக்க முடிந்தது. :-)

கானா பிரபா,

நல்ல முயற்சி இது. பதிவில் பல நகைச்சுவைப் பகுதிகள் என்னைச் சிரிக்க வைத்தன. பின்னூட்டங்களும் அதே அளவு சிரிக்க வைத்தன. ஈழத்துப் பதிவர்கள் எல்லாருமே இங்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. நல்ல பின்னூட்டங்கள்.

உங்கள் பதிவையும் என் கூகுள் ரீடரில் போட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் மாதாந்தம் போடப்போகும் பதிவுகளை விடாமல் படித்துவிடுவேன்.

 

said ... (February 20, 2007 12:10 PM) : 

வணக்கம் குமரன்

முதற்தடவை என் வலைப்பக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள். தங்களைப் போன்ற மூத்த, எழுத்தாற்றல் மிக்க பதிவர்களின் கருத்தால் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

said ... (February 20, 2007 12:15 PM) : 

மிகச்சமீபத்தில் 80 இல் வந்த நகைச்சுவையில்
கியர்ப் பெட்டியை மறைக்கிறது ஆச்சி வைத்திருக்கும் கடகம்

ட்றைவர்: ஆச்சி கடகத்தை அங்காலை எடணை , கியர் போடப்போறன்
ஆச்சி: அதை உந்தக் கடகத்துக்குள்ள போடு மேனை

 

said ... (February 21, 2007 2:22 AM) : 

பிரபா, உங்கள் அன்பிற்கு நன்றி. மூத்த, எழுத்தாற்றல் மிக்க பதிவர் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். :-)

இதற்கு முன்பே உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேனே. பின்னூட்டம் இட்டதாகவும் நினைவு. வாரியார் சுவாமிகளைப் பற்றிய பதிவு உடனே நினைவிற்கு வருகிறது.

ஈழத்துப் பதிவர்கள் இடுகைகளைப் படித்தால் எனக்குத் தோன்றும் ஐயங்களைக் கேட்பது வழக்கம். இந்தப் பதிவிலும் அப்படி சில ஐயங்கள் இருக்கின்றன. தமிழகத் தமிழில் விளக்குகிறீர்களா?

அரக்கி நில்லும், நாரி முறிய முறிய, கொழுவுதல், அந்தக் கொட்டனை விட்டுட்டு, அந்தரிக்கிறீர், கோல்ட் ஓன் - இவற்றிற்கு பொருள் என்ன? இடத்துக்குத் தகுந்த படி பொருள் கொண்டேன். அவை சரியா என்று அறிய வேண்டும்.

 

said ... (February 21, 2007 8:59 AM) : 

வணக்கம் குமரன்

கொடுத்ததை வாபஸ் பெறமுடியாது ;-)

இதோ நீங்கள் கேட்ட விளக்கங்கள்

அரக்கி நில்லும் - தள்ளி நில்லுங்க

நாரி முறிய முறிய - இடுப்பு ஒடிய ஒடிய

கொழுவுதல் - இங்கே அர்த்தப்படுவது மாட்டுதல் என்ற அர்த்தத்தில் , தவிர கொழுவுதல் என்பதற்கு சீண்டுதல், சேட்டை பண்ணல் என்றும் அர்த்தப்படும்

அந்தக் கொட்டனை விட்டுட்டு - பஸ்ஸில் இருக்கும் தூணை விட்டுடுங்க
அந்தரிக்கிறீர் - அவசரப்படுறீங்க
கோல்ட் ஓன் - hold on(தற்காலிகமாக) நிற்பாட்டுங்க

இந்த நாடகத்தை அப்படியே தமிழகப் பேச்சுவழக்கிலும் தரவிருந்தேன், அதற்கு நேரப்பற்றாக்குறை

 

said ... (February 21, 2007 9:04 AM) : 

மிக்க நன்றி பிரபா.

ஒலிவடிவில் கேட்க முடியவில்லை. என் கண்ணியில் ரியல் ப்ளேயர் இல்லை. என் துணைவியாரின் அலுவலக மடிக்கணினியில் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று கேட்டுப் பார்க்க முயல்கிறேன் - அவர் வீட்டிற்கு வந்து வேலை எதுவும் மடிக்கணினியில் செய்யாமல் இருந்தால். :-)

தமிழகத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழில் நன்றாக இருக்கிறது.

 

said ... (February 21, 2007 9:07 AM) : 

கொழுவுதல் தவிர மற்ற எல்லா சொற்களுக்கும் சரியான பொருளையே கொண்டிருக்கிறேன். கொழுவுதல் என்றாலே என்னவென்று அப்போது புரியவில்லை. ஆக கொழுவி என்றால் எல்லாரையும் சீண்டிப் பார்ப்பவரா? அவரிடம் பார்த்து நடந்து கொள்கிறேன். :-)

 

said ... (February 21, 2007 9:18 AM) : 

குமரன்

நாரதர் கலகம் நன்மையில் முடியும்
கொழுவியின் கலகம் கொம்ப்றமைசில் (compromise) முடியும் ;-)

 

said ... (February 21, 2007 9:27 AM) : 

ஓய் கானப் பிரபா, உதுக்க ஏன் என்ன இழுக்கிறீர்?
குறுக்கால போவார் எங்க போனாலும் கொழுவாம இருக்க மாட்டாங்கள் :-)

 

said ... (February 21, 2007 9:31 AM) : 

ஆஹா, வந்துட்டாருய்யா
நாரதரு ;-))

 

said ... (February 21, 2007 9:33 AM) : 

பிரபா இதுக்குள்ளை எங்கை நாரதர் வந்தார் ;-)

 

said ... (February 21, 2007 9:35 AM) : 

என்ன அற்புதம் கேட்க முன்னம் நாரதர் வந்து விட்டார்

 

said ... (February 21, 2007 9:36 AM) : 

சின்னக்குட்டியர்

எங்கையோ இருந்த மனுசனை இழுத்தது வம்பாப்போச்சு

 

said ... (February 21, 2007 9:49 AM) : 

பிரபாண்ணா இன்றைக்குத்தான் அம்மா கேட்டவா..விழுந்து விழுந்து சிரிச்சா. "குமுழடிப்பிள்ளையார்" கோயிலுக்கு ஆவணிச் சதுர்த்திக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஓருமுறை நிகழ்சி செய்ய வந்திருந்தாராம் அதைப்பற்றி நிறையக்க கதைகள் சொன்னவா அம்மா.அடுத்த பதிவு அதுவாக்கூட இருக்கலாம்.நன்றி.

 

said ... (February 21, 2007 2:23 PM) : 

வணக்கம் சினேகிதி

உங்கள் அம்மா இந்த ஒலிப்பதிவைக் கேட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்ன தகவல்களோடு உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்.

குமுழடிப்பிள்ளையார் எங்கே இருக்கிறார்?

 

said ... (February 21, 2007 6:31 PM) : 

ஐயா,

கால்ங்கார்த்தால குடலை கிழிச்சுப்போட்டிய போங்க :-)

இந்த சுட்டியை எனக்குச் சுட்டிய மதியக்கா:-) வுக்கு நன்றி.

மீதமிருந்தாலும் வலையேத்துங்க

சாத்தான்குளத்தான்

 

said ... (February 21, 2007 7:17 PM) : 

வாருங்கள் ஐயா ;-)

கேட்டுக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். மதியக்கா என்று அடைமொழியிட்டதற்கு அவரிடம் வாங்கிக் கட்டப்போகிறீர்கள் ;-)

ஒலிக்களஞ்சியங்கள் 2 வார இடைவெளியில் ஒவ்வொன்றாக வரும். காத்திருங்கள்

(எனக்குள்) அண்ணை றைற் பதிவு போட்டாலும் போட்டேன், வலைப்பதிவர்கள் பலர் முதல் தடவையா வருகினம்.

 

said ... (February 21, 2007 7:38 PM) : 

வணக்கம் தலிவா

 

said ... (February 21, 2007 7:39 PM) : 

நல்லாருக்கீங்களா ?

 

said ... (February 21, 2007 7:58 PM) : 

நல்லாயிருக்கேன்பா

யாரோ ஒரு உடன்பிறப்பு எனக்கு 100 வது பின்னூட்டத்தை எட்டிப்பிடிக்க உதவியிருக்கிறார் ;-))

 

said ... (February 21, 2007 8:41 PM) : 

றைற், றைற்.. நல்லா சிரிப்பான சிரிப்பு..

பதிவைப் பார்த்துட்டு, நீங்க எழுதியிருக்கும் றை, ரை தமிழ் புரியாமல் (வசந்தன் தனிப் பதிவு போட்டு விளக்கியும் t ஐ ற் என்று படிக்க வருவதில்லை:( ), அப்படியே ஓடிட்டேன்.

மதி மட்டும் தனிமடலிடாவிட்டால் இந்த நல்ல நாடகத்தை இழந்திருப்பேன்.

பிரபா, இதே போல் நாடகங்களை ஒலியாகவும், எழுத்துவடிவிலும் கொடுத்துக் கொண்டே இருங்கள் :) நாங்கள் சிரித்துக் கொண்டே:)))

 

said ... (February 21, 2007 9:12 PM) : 

வணக்கம் பொன்ஸ்

தமிழக நண்பர்கள் லேட்டாகத்தான் வருகிறீர்கள் போல. இந்தச் சம்பவக் களம் தமிழகத்துக்கும் உகந்தது, ஒரேயொரு வித்தியாசம் மொழி நடை மட்டுமே. கட்டாயம் இது போன்ற பதிவுகளைத்தருகின்றேன். ஈழத்துச் பேச்சுவழக்குச் சொற்களைப் பகிர்ந்தும் கொள்ள ஒரு சந்தர்ப்பம்

 

said ... (February 22, 2007 3:18 AM) : 

Prabannaku vadikalayalgar koodikondu pothu :-) Viyaparam nalla nadakadum.

"வணக்கம் தலிவா"
Seylalar porulalar ellarum ready a?

 

said ... (February 22, 2007 2:30 PM) : 

ஓமோம், நல்ல வியாபாரம்,
எனக்குத் தெரியாமலேயெ சங்கம் தொடங்கீட்டினம் ;-)

 

said ... (February 22, 2007 4:54 PM) : 

:-)))))))))))))

சிரிப்பை அடக்க முடியவில்லை. என் பால்ய நினைவுகளும் ஊர் நினைவும் வருகிறது.

 

said ... (February 22, 2007 8:25 PM) : 

வாங்க பாலா, பழைய நினைவுகள் மலர்கின்றதோ?

 

said ... (February 22, 2007 8:48 PM) : 

அன்பின் கானா பிரபா!

ரைட்...றைற்.... :) நல்லா சிரிக்க வைத்தீர்கள். பால்யகாலத்தில் எங்கள் ஊரில் வரும் பேருந்துகளை வைத்துத்தான் மணி சொல்வார்கள்.

இப்ப மணி என்னவென்று கேட்டால், "இப்பத்தான் திருமுருகன் வர்ற நேரம்"

"நேத்து சந்திரா வந்தப்ப நான் ரோட்டுலதான் நின்னேன்"

சந்திராவும், திருமுருகனும் பேருந்துகளே.

நல்ல பதிவு. நன்றி நண்பரே!

ரசதந்திரத்துக்கு அப்புறம் ஏதும் மலையாளப் படங்கள் பாக்கலியோ?

சினேகபூர்வம்
முபாரக்

 

said ... (February 22, 2007 8:54 PM) : 

வணக்கம் முபாரக்

உங்களின் பழைய நினைவுகளும் சுவையாக இருந்தன. மறக்கமுடியுமா அந்த நாட்களை.

ரச தந்திரத்துக்குப் பிறகு நிறைய மலையாளப்படம் பார்த்துவிட்டேன்.
காழ்ச்சா, மற்றும் வடக்கும் நாதன் படங்களின் பதிவும் போட்டிருக்கின்றேன். சமயம் கிடைக்கும் போது வாசித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

அடுத்த பதிவு கூட ஒரு மலையாளப் படப் பதிவு தான். படப் பெயர் "மனசினக்கரே".

 

said ... (February 24, 2007 12:14 AM) : 

பிரபா அண்ணா,
நல்ல ஒரு ஆக்கம், நீண்ட நாட்களின் முன்பு கேட்ட (Gna)நாபகம்... பதிவு தந்ததற்கு நன்றி.
ஓரு பதிவு ஒன்றில்(tamilmanam.com).... கானா பிரபாவிற்கு இது சமர்ப்பணம் என்று இருந்தது... நான் நீங்கள் மண்டையப் போட்டுடீங்களோ எண்டு நினைச்சன் :P... உயிரோடு இருந்தால் தெரியப் படுத்தவும் :P

 

said ... (February 24, 2007 12:19 AM) : 

தம்பி ஹரன்

உதுதான் லண்டன் குசும்போ, மெல்பனுக்கு வாரும் கவனிக்கிறன் ;-)

பதிவை வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள் ;-))

 

said ... (February 24, 2007 1:04 AM) : 

hi prabanna, thanks.sinna vajasila otukka kedditukkan. unkada muthal pathiva paarththiddu ninaichchan. "atha etukkumo" anru. athethan. kavanama etunko. unkalukku ujitoda smaathi kaddi poduvankal pola.

 

said ... (February 24, 2007 1:23 AM) : 

வணக்கம் கிருஷ்ணா

உங்கள் வருகைக்கு நன்றிகள், தெரிஞ்சாக்கள் என்பதால மன்னிச்சுவிடுவம் என்ன ;-)

 

said ... (February 24, 2007 11:40 PM) : 

அருமையான பதிவு பிரபா.
கேட்டுக்கொண்டே பாடலைப் படித்தபோது எளிமையாகவே இருந்தது
கொழுவுதல கொட்டனை போன்ற வார்த்தைகளே பிடிபடவில்லை.
இது போன்ற மொழி கலாச்சாரம் சார்ந்த பதிவுகள் நிறையத் தேவை.

அயராத உத்வேகத்துடன் பல தரமான பதிவுகளை தொடர்ந்து தந்து வருகின்றீர்கள்.
இனியும் தொடர வேண்டும்.

[கிளிநொச்சி மொட்டைக்கருப்பன் அரிசி என்று ஒரு ஸ்பெஷல் அரிசி
கடைகளில் கண்டேன் அதன் தனித்துவம் என்ன :-)]

 

said ... (February 25, 2007 12:05 AM) : 

வணக்கம் கார்த்திக்

நேரமெடுத்துப் பதிந்த களைப்பு இப்போது தான் மெல்ல மெல்ல விலகுகின்றது உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தல்களால். நீங்கள் கேட்ட சொற்களின் அர்த்ததைக் குமரனும் கேட்டிருந்தார். அவற்றுக்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தேன். இயன்றவரை எமது பேச்சுவழக்கையும் நம் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் இதுவுமொன்று.

கிளிநொச்சி பிரதேசம் நெற்பாசனத்தில் சிறந்துவிளங்கும் பிரதேசம். அங்கு விளையும் நெல்லினங்களும் பூநகரிப் பிரதேச நெற்செய்கையும் நம் தாயகத்தின் தன்னிறவை வெளிப்படுத்தும் சில சான்றுகள்

 

said ... (February 25, 2007 12:36 AM) : 

//மெல்பனுக்கு வாரும் கவனிக்கிறன் ;-)//
மெல்பண் குடிபெயரப்போகிறீர்களோ:)

மேலும் ஒரு விடயம். உங்கள் பழைய பதிவுகள் (மாம்பழத்திற்கு முன்னையது) ஒன்றும் உங்கள் sidebar இல் தெரியவில்லையே? கவனியுங்கள்.

 

said ... (February 25, 2007 12:46 AM) : 

போற போக்கப் பார்த்தால் மெல்பனுக்கு போனால் எனக்கும் நல்லது, வசந்தனின் கட்சியையும் வளர்த்த மாதிரி அண்ணா ;-)

புது புளக்கர் செய்த கைங்கரியங்களில் அதுவும் ஒன்று, கிட்டத்தட்ட எங்கள் பழைய பதிவுகளை மற்றவர்கள் படிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கமாக்கும். புதுத் தளம் ஒன்றை உருவாக்கி புளக்கருக்கு ஆப்பு வைக்கவுள்ளேன். சயந்தன் மாஸ்டர் கை குடுக்கவேணும். ;-)

 

said ... (February 27, 2007 3:01 AM) : 

கானா பிரபா,
வேலைப் பளுமிகுந்த நாள் ஒன்றில் உம்மணா மூஞ்சியுடனும் தூக்கம் வந்த நிலையிலும் இந்தப் பதிவைப் பார்த்தேன்.அன்றைய நாளின் எரிச்சல்களையெல்லாம் மறந்து சிரிக்க முடிந்தது.

"அண்ணை றைட்" ஐ மிகவும் கவனமெடுத்து பதிவு செய்துள்ளீர்கள்.
மீண்டும் மீண்டும் படிக்கத் தக்க பதிவாக இது உள்ளது.
ஃபஹீமாஜஹான்

 

said ... (February 27, 2007 11:30 AM) : 

வணக்கம் ஃபஹீமாஜஹான்

இப்படியான பதிவுகள் உங்களையும் கவரும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஆளைக் காணவில்லயே என்று நினைத்தேன். இப்போது தான் புரிகிறது வேலைப்பளு என்று.

உங்களின் மேலான கருத்துக்கு நன்றிகள்.

 

said ... (February 28, 2007 3:23 AM) : 

பிரபா,
இந்தப் பதிவைப் பார்த்தவுடன் கிழக்கில் இருந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன.
இத்தகைய அனுபவங்கள் பல அங்கு வாய்த்திருக்கின்றன.

"கோல்ட் ஓன்" கிழக்கில் வைத்துத் தான் இந்த சொற்களை அந்த மக்களின் உச்சரிப்புடன் முதன் முதலில் கேட்டு என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் இருந்தேன்.

அங்கு அதிரடிப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்த பயணங்களிலும்
சொல்லமுடியாத ஏதோ ஒரு இன்பம் இருந்தது.சிலர் ஆடுகளைக் கூட எடுத்துக் கொண்டு ஏறியிருப்பார்கள்.நண்பர்களும் அதே வாகனத்தில் ஏறியிருப்பார்கள்.நாங்கள் ஆளை ஆள் பார்த்துச் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்போம்.கல்லூரியடியில் இறங்கியவுடன் வெடித்துச் சிரிப்போம்.


வடக்கு கிழக்குக்கு வெளியே பஸ்களில் பயணிக்கும் போது எல்லாச் சுதந்திரத்தையும் இழந்தவர்கள் போலத்தானே போய் வர வேண்டியுள்ளது.

ஃபஹீமாஜஹான்

 

said ... (February 28, 2007 8:57 AM) : 

//வடக்கு கிழக்குக்கு வெளியே பஸ்களில் பயணிக்கும் போது எல்லாச் சுதந்திரத்தையும் இழந்தவர்கள் போலத்தானே போய் வர வேண்டியுள்ளது.//

உண்மை

இதுபோல் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் நாம் பிறந்த மண்ணில் இல்லையா?

 

said ... (February 28, 2007 8:38 PM) : 

காலத்தால் அழியாத பதிவுகளுக்கு உயிரோட்டம் கொடுத்தமைக்காக கானா பிரபாவுக்கு மிக்க நன்றிகள், தொடர்க உங்கள் இலக்கியப் பணி!

 

said ... (February 28, 2007 9:27 PM) : 

வணக்கம் இலக்கியா

தங்களைப் போன்ற நண்பர்களின் உற்சாகப்படுத்தல்களுக்கு மிக்க நன்றிகள்.

 

said ... (March 18, 2007 3:15 PM) : 

கானா பிரபா,
பதிவுக்கு மிக்க நன்றி. இப்பதான் இந்த நாடகத்தைக் கேட்டேன். இன்னும் சிரிப்பு அடங்கேலை. சுத்த யாழ்ப்பாணத் தமிழில் ஒரு அருமையான பகிடி. இன்னும் இது போல் எம் தாயகத்துக் கலைஞர்களின் படைப்புக்களை ஒலி/ஒளி வடிவில் தாருங்கள்.

 

said ... (March 18, 2007 11:34 PM) : 

வருகைக்கு நன்றி வெற்றி

இப்படி நிறைய ஈழத்து நகைச்சுவை ஒலிப்பதிவுகளை வரிசையாகத் தரவிருக்கிறேன், ஆனால் சிறிது கால இடைவெளி விட்டு, காரணம் எல்லாவற்றையும் ஒன்றாகத் தந்தால் தித்திக்கும்.

 

said ... (September 02, 2007 7:18 PM) : 

நான் ஏதோ கடகப்பெட்டியென்றால் என்னவெண்டு கூகிளில் தேடிக் கொண்டு மடத்து வாசல் பிள்ளையாரடிக்கு வந்தினம்.

நல்லதொரு பேருந்து பயணம் செய்து முடித்த மகிழ்ச்சி பிரபு!

 

said ... (September 02, 2007 8:30 PM) : 

//வெயிலான் said...
நான் ஏதோ கடகப்பெட்டியென்றால் என்னவெண்டு கூகிளில் தேடிக் கொண்டு மடத்து வாசல் பிள்ளையாரடிக்கு வந்தினம்.//

வாங்க வெயிலான்

காலம் கடந்து கேட்டிருக்கீங்கள், மிக்க நன்றி ;-))

 

said ... (August 15, 2009 9:53 PM) : 

அண்ணா ஒலிவடிவில் கேட்கமுடியாமலிருக்கு ஏதாவது செய்யுங்களன் . . .

 

said ... (September 29, 2009 8:49 PM) : 

இந்த ஒலிவடிவத்தை மீண்டும் கேட்பதற்கு ஏதாவது செய்வீர்கள் எண்டு நம்புகின்றேன். ஏனென்றால் இங்க இதை நான் அடிக்கடி போட்டுக் காட்டி கெத்து காட்டுற வழமை :). இப்ப வேலை செய்யாத படியால் என்ர பாடு கஸ்ரமாய் இருக்கு அண்ணை. :)

 

post a comment

Links to ""அண்ணை றைற்""

Create a Link